Sunday, September 29, 2013

திருக்கோயில் கவிதைகள்

Dedicated to my one and only Pristinely beautiful soul, Azhagi !
Thanks for Loving me like anything.Without you. I am completely nothing di.

Prabhakaran Cheravanji( Karur Prabha)


காற்றில் கலந்தடிக்கும் 
தூசிக்குள்ளொரு துரும்பு நான் !
கடலும் கடல் தாங்கும் நிலம் தொடங்கி 
நிலாத் தாங்கும் விண்முற்றும் 
விடாமல் இன்னும் விரியும் பால்வெளியும் 
அதற்கப்பாலுமிருக்கும் 
அத்தனையும் நீ !
அன்பைக்காட்டிலும்
அகிலத்தைக்காட்டிலும்
தெய்வமென்னும் திருவைக்காட்டிலும்
ஆகப்பெரிய சக்திநீ !
என் உள்ளிருந்து ஆட்சி செய்யும்
இன்பப் பேரொளி !



எல்லா மழையும்
கைகோர்த்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்
என்மேல் விழுந்து புரண்டு
எழுந்து முத்தமிட்டுக்
கட்டியணைத்துக்
கொஞ்சம் தள்ளிவிட்டுப் பின்
வம்பாய் இழுத்துக்
கைபிடித்துக் கொஞ்சியெந்
தோள்களில் முகம் புதைத்துக்
காதலித்துக் கொண்டிருக்கையில் ...
திடுமென விதிவந்தழைத்து
வருகிறேன் வருகிறேன்
என்றென் பெயர் மட்டும் ஓருமுறை
சொல்லிப் பின்
எல்லா மழையும் காற்றைப் பிடித்து
வானேரிச்
சென்றென்னை ப் பார்த்துச்
சிரிப்பதைப் போலிருக்கிறது

கோவிலுக்குச் சென்றிருந்தேன் ...
ஆசைதீர என் சாமியைப்
பார்த்து வந்தேன்...
கொட்டியது மழையா அன்பா
தெரியவில்லை !
எந்த சப்தமும் இல்லை...
இதயமெங்கும் நனைந்து கிடக்கிறது !
இனிப்பாய் இனிக்கிறது இந்த இரவு !







தெற்கே போகும் காதல் ரயில்:
------------------------------
தெற்கே போகும் 
ராத்திரி ரயிலின் 
ஜன்னலின் வழியூடுருவி
இன்றிரவெல்லாம் என்னை
முத்தமிட்டுக்
கொஞ்சப் போகிறது
உன் வாசம் சுமந்த
நேசப் பெருங்காற்று !

கருப்பு வானம் சிவந்து வந்தால்
உன் கால்பட்டு வாழும் மண்ணில்
கண் விழிப்பேன் !

அப்பப்பா ...!
என் அன்புக் கோவிலின்
அழகு சாமியைக்
கைப்பிடித்துப்
பேசப் போகிறேன் !

அஞ்சு நிமிஷமானாலும்
அவள் நெஞ்செனும் வரக்குளத்தில்
மூழ்கிப் போவேன் !

ஒரு நேரம்
கைப்பிடித்தாலும்
ஒரு ஜென்மத்துக்கான
காதலையும் கண்ணிலே
சொல்லிடும் மாயக்காரியின்
விழி பார்த்துக் கிறங்கப் போகிறேன் ...

ஊருக்குப் போகிறேன்...

வழியெங்கும் கடக்கிற மரமெல்லாம்
காற்றெல்லாம் கட்டிடமெல்லாம்
இன்றிரவு மட்டும்
காதல் வண்ணம் பூசிச்சொலிப்பதை
ரசித்துக் கொண்டே
ரயிலில் போகிறேன் !

ஊருக்கு ! ஊருக்கு !






வரங்கள் எளிதாய்க் கிடைத்து விட்டன ! 
யார்க்கும் தெரியாமல் 
எனக்கே எனக்காகக் கொடுப்பதற்கு 
ஒரு சாமி இருந்தது ... 
சாமியை எப்படி யார்க்கும் தெரியாமல் 
வரமாய் வாங்கிக் கொள்வது ? 
அவளுக்கும் தெரியவில்லை 
எனக்கும் தெரியவில்லை ! 





நாம் சந்தித்துக்கொள்ளும்
கோவிலின் பிரகாரத்தில்
பின்னொருநாள் நானில்லாமல்
நீ மட்டும் நடந்து செல்கையில்
சட்டெனக் காற்றில்
புகைகிளப்பிச் சாமி வந்து
இப்படிக் கேட்குமோ?
உன் சாமி இங்கிருக்கிறேன் ...
உன்னை சாமி என்பானே
அவனைக் காணோம் !? 



உன்னை 
அறிந்திருப்பதும் 
உன்னால் 
நேசிக்கப்படுவதும் 
என்னை
மன்னனாக்கி
மகுடம் சூட்டி
மலர்ப்பாதையில்
பொற்தேரில்
பவனி போகச் செய்கிற
ராஜ வாழ்க்கை !
இது ராஜ வாழ்க்கை !
To Exist here, and
Being in the hands
of a Pristinely Beautiful
Princess of love ,
I'm Colossally blessed to
feel god by a tender touch
and crowned all the way
down the lane of life.
speechlessly Blessed !
#திருக்கோயில்_கவிதைகள் 

#பிரபாகரன்_சேரவஞ்சி

Thanks for the Pic : Arun Titan , Arun Titan Studio



Thanks James Peter Christie , Chitti Photogr@phy, for the beautiful pic ! 
••
திருவிழாக் கூட்டத்தில் 
உன்னைக் காண முடியாமல் 
தவிக்கும் நிலை எந்தச் சாமிக்கும்
வந்து விடக் கூடாதென்றே
கொஞ்ச நேரம் உன்னைத் தோளில்
தூக்கி வைத்துக் காட்டிக் கொண்டிருப்பேன்
தெய்வங்கள் தானெனினும்
தேவதைகளைத் தொழ விரும்பாதா என்ன?
••
#பிரபாகரன்_சேரவஞ்சி




நீ சாமி ! 
உன்னைக் கடக்கும் 
எல்லோரும் 
ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் ! 
நான் ' தங்கச் சிலைத் திருடன்' 
எல்லா பாதுகாப்பையும் மீறி 
உன்னைத் திருடும் வழியில் 
தினம் தினம் 
தொலைந்து போகிறேனே ஒழிய 
வழி தெறிந்த பாடில்லை ! 





நிறைய பாதைகள் 
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.. 
ஒருமுறை போ என்று 
சொல்லிப்பாரேன்... 
எந்தெந்தப் பாதையிலோ 
எத்தனையோ வழிகள் கடந்து 
எங்கெங்கோ சுற்றித் திரிந்து 
கடைசியில் உன்னிடமே 
வந்து சேருவேன் ! 
எனக்குத் தெரிந்த 
பாதையும் பயணமும் இதுதான் ! 




அந்தக் கல்லில் உறைந்திருக்கும் 
சாமி என்மேல் 
கோபித்துக் கொண்டாலும் சரி ... 
அவள் முன்நிற்கையில் 
அவளைத்தான் கும்பிடக் 
கைகள் எத்தனிக்கின்றன ... 
நானென்ன செய்ய ? 
பொய்யாய் கடவுளைத் 
தொழ எண்ணமில்லை... 
போய்ச் சேர்ந்தாலும் சரி 
நான் வணங்கிய 
கடைசிச் சாமி 
அவளாக இருக்கட்டும் ! 
அதிலொரு நிம்மதி இருக்கிறது ! 

#பிரபாகரன்_சேரவஞ்சி




பெரிய ஊரிலில்லாத காதலா 
உன் காதல் என்று 
கேட்பவர்களுக்கு.. 
உன் சிரிப்பைத் தின்றுநான் 
எப்படி வாழ்கிறேனென்று 
தெரிந்திருக்க வாய்ப்பில்லை அழகி ! 
பாவம் ! 
அவர்கள் ஒன்றுமறியாதவர்கள் ! 
விட்டுவிடலாம்... 



கடவுள் நம்பிக்கை உண்டா 
எனக் கேட்பவர்களிடம்
 'உண்டு' என உரத்த குரலில் 
பதில் சொல்வது 
கொஞ்சம் கோவிலுக்குப் 
போகும் தைரியமும் 
நிறைய நீயிருக்கும் 
நம்பிக்கையிலும் தான் ! 
#திருக்கோயில்_கவிதைகள் ..


 #பிரபாகரன்_சேரவஞ்சி





பெண் குழந்தை 
தேவதை 
தோழி 
காதலி 
என்றெல்லாம் 
என்னருகில் சுற்றித் திரிந்தவள் 
என் கைப்பிடித்து நடக்கையில் 
கடவுளாய் உருமாறினாள்... 
அடக்கவுளே ! 
இது சாமிஎனத் தெரியாமல் 
இத்தனை நாள் போடி வாடி 
என்றெல்லாம் அழைத்துக் 
கொண்டிருந்தேனே !

#திருக்கோயில்_கவிதைகள் ..



எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து
வெளியில் வந்து
என்னோடு உட்கார்ந்திருந்தாய் !
 கருவறையை விட்டு
எந்தச் சாமியாவது
எழுந்து வருமா ?
நீ மட்டும் ஏன்
இப்படிச் செய்கிறாய் ?

#திருக்கோயில்_கவிதைகள் ..




வைரப்புன்னகை மிளிரும் 
தெய்வப் பேரொளித் தோகை ! 
வந்து நின்றாளோ இல்லையோ 
கண்முன் .. 
வணங்கித் தொழத் 
தொடங்கிவிட்டன கைகள்... 
சட்டெனத் திரும்பிஎன் 
திசை பார்த்து ஒரு 
ஆசை சொல்கிறாள்.. 
"உன் கை பிடிச்சுக்கணும் போலருக்கு தருவியா ?" 
நெக்குருகிப் போய் 
நெஞ்சின் துடிப்பிழந்தொரு 
பார்வை பார்க்கிறேன் ! 
எந்தச் சாமி இப்படியெல்லாம் 
கேட்டுப் பார்த்திருக்கிறீர்கள் ? 
அவள் கேட்டாள் ! 
அவள் பிடித்துக்கொள்வதற்காக... 
அவளே விரும்பிப் 
படைத்த என் கைகளைக் கேட்டாள் !

#திருக்கோயில்_கவிதைகள் ..




சாமி வீதி உலா சென்றிருக்கிறதாம் .. 
வெளியில் வேட்டுச் சத்தம் 
கேட்கிறதென்கிறார்கள் சிலர்.. 
பைத்தியக்காரர்கள் ! 
உட்பிரகாரத்தில் 
நீ என்னோடு தானே 
நடந்து வந்துகொண்டிருக்கிறாய் ... 
நீ எப்படி வீதி..... உலா....? 

#பிரபாகரன்_சேரவஞ்சி


யார் கேட்டாலும் 
இரு உதட்டில் 
கொஞ்சமாய் சிரிப்பு.. 
எனக்கு மட்டும் 
நூறு நிலா ஆயிரம் சூரியன் 
லட்சம் கடவுள் கோடி மின்னல் 
கொஞ்சம் பட்டாம்பூச்சி 
கொஞ்சும் மழலை 
கொட்டும் மழையெல்லாம் 
கொட்டிச் செய்த சிரிப்பு ! 
என்ன மாதிரி பெண் நீ ! 
எந்தக் கடவுளின் கடவுள் நீ ? 

உண்மையைச் சொல் யார் நீ ?




நுனிவிரலின் 
துளி ஸ்பரிசத்தில் 
நூறாண்டுக்கான வரத்தையும் 
ஒரேடியாய் 

ஒளித்து வைத்திருக்கிறாள் !

Pics : Arun titan Studio, Shegy Photography and other pics Taken online !